சென்னை: ஸ்ரீதியாக பிரம்ம கான சபா சார்பில், நான்காவது ஸ்ரீஜெயந்தி இசை திருவிழா, சென்னையில் நேற்று துவங்கியது. இதில், சிறந்த கர்நாடக இசை கலைஞர்களுக்கு, 'வாணி கலா நிபுண' விருதுகள் வழங்கப்பட்டன.
ஓபுல் ரெட்டி ஞானம்பா நினைவை போற்றும் வகையில், ஸ்ரீதியாக பிரம்ம கான சபாவுடன், இந்தோ நேஷனல் லிமிடெட் இணைந்து, நான்காவது, 'ஸ்ரீஜெயந்தி இசை திருவிழா 2013'ஐ, தி.நகரில் வாணி மகாலில், 15 நாட்கள் நடத்துகிறது. நேற்று நடந்த இதன் துவக்க விழாவில், சபா தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் நடிகை சச்சு, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது: என் ஆசையை நிறைவேற்றிய சபா, தியாக பிரம்ம கான சபா. நான், அவ்வையார் படத்தில் நடித்ததால், எம்.எஸ்., அம்மாவுக்கு என்னை மிகவும் பிடிக்கும். எனக்கு, இந்த சபா மூலம் அவர் விருது வழங்கி உள்ளார். பரத நாட்டியத்திற்கு சங்கீதம் தெரிந்தால் நன்று. நான் முழுமையாக சங்கீதம் கற்று கொள்ளவில்லை என்ற வருத்தம், இப்போதும் உள்ளது. இந்த விழாவை பொறுத்தவரை, கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மிகச்சிறந்த கலைஞர்கள் உள்ளனர். அவர்களை ஊக்குவிப்பது நம் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
'தினமலர்' நாளிதழ் வர்த்தக மேலாளர், ஆர்.லட்சுமிபதி, விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது: பிரபலமானவர்களோடு இந்த மேடையை பங்கிடுவதில் பெருமை கொள்கிறேன். இசையையும், கலையையும் பெருமைப்படுத்தும், தினமலர் நிறுவனத்தில் இருந்து நான் இங்கு வந்துள்ளேன். என்றாலும், நான் இங்கு வர, நெருங்கிய காரணம் உண்டு. கர்நாடக இசை மேதை செம்பை வைத்யநாத பாகவதரின் கொள்ளுப்பேரன் என்ற தகுதியே அது. எனது தாத்தா, அம்மா வழியாக, இசை என்னைச்சுற்றி எப்போதும் வாழ்கிறது. செம்பையை நேரில் பார்த்தது இல்லை என்றாலும், அவரைப்பற்றி நிறைய படித்திருக்கிறேன்; கேட்டிருக்கிறேன். சிஷ்யர்களின் திறமையை அவர் மறைத்தது இல்லை; அவர்களிடம் பாகுபாடு காட்டியது இல்லை. அவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கு முக்கியத்துவம் தருவார். ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன். ஒருநாள், கச்சேரி முடிந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார் செம்பை. ரயில் நான்கு மணி நேரம் தாமதம். உடனடியாக சிஷ்யர்களுக்கு, ஒரு புதிய கீர்த்தனையை பற்றி, 2 மணி நேரம் பாடம் எடுத்தார். அங்கு கூட்டம் கூடிவிட்டது. சிஷ்யர்களுக்கு சங்கீதம் சொல்லித்தந்த அந்த அழகை பொதுமக்கள் ரசித்தனர். அந்த ஆசிப்பெற்ற சிஷ்யர்கள்...பிரபல பாடகர்கள் ஜெயன், விஜயன். அடாணா ராகத்தில், பாலகனகமய கீர்த்தனத்தை அந்த ரயில்வே ஸ்டேஷனில் பயின்றனர். நடந்த இடம்...தஞ்சாவூர்! இன்று, நமது பிரபல இசை மேதைகள் எல்லாம் நேரம் இல்லாமல், பரபரப்பாக இயங்குகின்றனர். அவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது தான். சங்கீதம் கற்க விரும்புகின்றவர்களை, சீடர்களாக ஏற்று ஊக்கப்படுத்துங்கள். தியாக பிரம்ம கானசபா போன்ற பல சபாக்கள் மூலம் இளம்தலைமுறைகள், இசை உலகில் சாதிப்பார்கள் என்று நம்புகிறேன். இளம் கலைஞர்கள், தங்கள் தனித்திறமையையும், நுட்பத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களில் இருந்து தங்களை வேறுபடுத்திக்காட்ட வேண்டும். இந்த மேடையில் என் கொள்ளு தாத்தா, தினமலர் நிறுவனர் ஸ்ரீ டி.வி.ராமசுப்பையர் அவர்களை நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன். தினமலர் நாளிதழை துவங்க வேண்டும் என்று ஆரம்பகாலத்தில் அவர் திட்டமிட்டபோது, பணத்தட்டுப்பாடு காரணமாக கையால் எழுதி நாளிதழை கொண்டு வந்தார். ஆனால் அயராத உழைப்
பின் காரணமாக, இன்று ஒரு மில்லியன் பிரதிகள் விற்கும் நாளிதழாக இருக்கிறது தினமலர். எனவே முயன்றால் முடியாதது இல்லை. இங்குவந்துள்ள கலைஞர்களின் வாழ்வு வளம் பெற, சாதனைகள் பல நிகழ்த்திட, மதுரை மீனாட்சியை வேண்டுகிறேன். பெரிய மேதைகள் பங்கேற்கும் இந்த சபா நிகழ்ச்சியில், என்னை பேச அழைத்த நிர்வாகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ராம-சேது பாலம் கட்ட, பகவான் ராமனுக்கு அணில் உதவியது போன்று, கர்நாடக இசை செழிக்க என்னால் முடிந்த உதவிகள் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விருது பெற்றவர்களை, மூத்த இசைக்கலைஞர் சுந்தரம் வாழ்த்தி பேசுகையில், ''இந்த சபா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இசைக்கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து ஊக்குவிக்கிறது. இச்சேவை தொடர வேண்டும்,'' என்றார்.
விழாவில், 'வாணி கலா நிபுண' என்ற பெயரில், குரலிசைக்கான விருது, கணேஷûக்கும், வயலின் இசைக்கான விருது, காரைக்கால் வெங்கட சுப்பிரமணியத்திற்கும், மிருதங்கத்திற்கான விருது, நெய்வேலி ஸ்கந்த சுப்பிரமணியத்திற்கும், பரத நாட்டியத்திற்கான விருது, லட்சுமி ராமசாமிக்கும், நாடகத்திற்கான விருது, கரூர் எஸ்.பி.ரங்கராஜுக்கும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருதுகளை பெற்று ஏற்புரை வழங்கிய ரங்கராஜு பேசுகையில், ''மூத்த தலைமுறைகளுடனும் விருது பெற்றேன். இப்போது, இளைய தலைமுறைகளுடனும் விருது பெறுகிறேன் என்பதில் மிகுந்த சந்தோஷம். 1956ம் ஆண்டு முதல், 33 நாடக குழுக்களுடன் இணைந்து நாடகங்களில் நடித்துள்ளேன். அப்போதெல்லாம் நாடகங்கள் குறித்து எந்த பத்திரிகையும் எழுதுவதில்லை. ஆனால், ஒவ்வொரு வாரமும், நாடகங்கள் குறித்து, 'தினமலர்' நாளிதழின் அங்காடித்தெரு வெளியிட்டு வருகிறது. இதைப்போல மற்ற பத்திரிகைகளும் வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம்,'' என்றார். விழாவில் சபா செயலர் மணி நன்றி கூறினார். சந்திரமோகன் தொகுத்து வழங்கினார்.